×

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து குணமடைந்தேன். அதன் பிறகு முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோதும் இதே போல அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. காய்ச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன தொடர்பு?
– எம்.ஷாலினி, சென்னை.

ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஒரு நிகழ்வுக்குப் பிறகு முடி உதிர்வு இருப்பது என்பது சாதாரணமானதுதான். அதற்கு ‘டெலோஜென் எஃப்ளுவியம்’ என்று பெயர். அந்த நிகழ்வு, நீங்கள் குறிப்பிட்டதுபோல டைபாய்டு, கொரோனா, டெங்கு காய்ச்சலாகவோ, சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையாகவோ, பிரசவமாகவோ எப்படியும் இருக்கலாம். அதாவது அந்த மாதிரி தருணங்களில் கூந்தலின் வளர்ச்சிநிலையானது அப்படியே நின்றுவிடும்.

ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்திய அந்தக் காலம் முடிந்ததும் முடிகள் எல்லாம் உதிரத் தொடங்கும். அது நிஜமான முடி உதிர்வு பிரச்னையே அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எல்லோருமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடி உதிர்வை எதிர்கொள்வோம். அதுதான் இயற்கை. ஆனால் ஸ்ட்ரெஸ்ஸான தருணங்களில் அப்படி முடி உதிராது. அந்த நாட்களைக் கடந்தபிறகு அப்போது உதிர்ந்திருக்க வேண்டிய முடிகள் எல்லாம் சேர்ந்து உதிரத் தொடங்கும். அதனால் வழக்கத்தைவிட அதிக முடி உதிர்வு இருப்பதாக உணர்வோம்.

இந்தப் பிரச்னையைத் தான் ‘டெலோஜென் எஃப்ளுவியம்’ என்கிறோம். இது சிலருக்கு ஆறு மாதங்கள் வரையிலும், சிலருக்கு அதைத் தாண்டியும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு 3 முதல் 6 மாதங்களில் இது நின்றுவிடும். எனவே இது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. முடி உதிர்கிறதே என்பதற்கும் சேர்த்துக் கவலைப்பட்டால் அந்த ஸ்ட்ரெஸ்ஸும் சேர்ந்து முடி உதிர்வை இன்னும் அதிகப்படுத்தும்.

முடி உதிர்வைத் தடுக்க ஆரோக்கியமான, சரிவிகித உணவுப்பழக்கம் முக்கியம். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூந்தலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம்.வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் இ போன்றவை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் செலினியம் சத்துகளும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியம். எனவே இவையெல்லாம் உள்ளபடி உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

என் வயது 40. கடந்த ஒரு மாதமாக எனக்கு ஏப்பம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பெரிய சத்தத்துடன் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. வேலையிடத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்… சிகிச்சை உண்டா?
– ஏ.கே.செந்தில்நாதன், வாணியம்பாடி.

ஏப்பம் என்பது எல்லா வயதினரும் சந்திக்கிற பிரச்னைதான். சாப்பிடும்போது அதிக அளவிலான காற்றையும் சேர்த்து விழுங்குவதால்தான் இப்படி வருகிறது. `இத்தனை காலமாக அப்படியெல்லாம் இல்லையே… திடீரென இந்தப் பிரச்னை ஏன் வர வேண்டும்?’ என்று சிலர் கேட்கலாம். உடலானது உள்ளே போன அதிகப்படியான காற்றை வெளியேற்ற முயலும்.
தண்ணீர் குடிக்கும்போது கடகடவென வேகமாகக் குடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸ்ட்ரா உபயோகித்துக் குடிக்கும் வழக்கம் அதிகமுள்ளோருக்கும் ஏப்பம் பெரும் பிரச்னையாக இருக்கலாம். சோமா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிக்கும்போது அவற்றின் மூலம் அதிக காற்று உள்ளே போக வாய்ப்பு உண்டு. அதனாலும் ஏப்பம் வரலாம்.சோடாவோ, ஏரியேட்டடு பானங்களோ குடிக்கிற வழக்கமே இல்லை, ஆனாலும் ஏன் இந்தப் பிரச்னை பாதிக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு நடுத்தர வயது அல்லது அதற்குப் பிறகுதான் `லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ எனப்படும் பால் ஒவ்வாமை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பனீர் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலோ, இரவு உணவுக்குப் பிறகு பால் குடித்தாலோ, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் காரணமாக ஏப்பம் வரலாம்.

அடுத்தது `ஆசிட் ரெஃப்ளெக்ஸ்’ எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை. நெஞ்செரிச்சல் பிரச்னையை நேரடியாக உணர மாட்டார்கள். ஆனால், அதன் விளைவாகப் புளித்த ஏப்பம் மட்டும் வரலாம். பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லதுதான்… ஆனால், அதற்காக அதிக அளவில் வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றைப் பெரிதாக வெட்டிச் சாப்பிடுவது, அதன் செரிமானத்தை தாமதமாக்கி, ஏப்பமாக வெளிப்படுத்தலாம்.

எந்த உணவையும் நன்கு மென்று விழுங்குவதுதான் இதற்கான முதல் தீர்வு. ஃப்ரெஷ்ஷான எலுமிச்சம்பழச்சாற்றில் சில துளிகளை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து அப்படியே குடிப்பது தீர்வளிக்கும். வெறும் எலுமிச்சைப் பழச்சாறு மட்டும் பிடிக்காதவர்கள், சிறிது ஆரஞ்சுச் சாறும் கலந்து குடிக்கலாம். `நெஞ்செரிச்சலால் ஏப்பம் வரும் என்கிறீர்கள்… எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறெல்லாம் குடிக்கச் சொல்கிறீர்களே…’ என்று கேட்பவர்கள், இதை முயற்சிசெய்து பார்த்தால் அது தரும் நிவாரணத்தை உணர்வார்கள். இப்படிக் குடிக்கும்போது பெரும்பாலும் உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் இருப்பதுதான் சிறந்தது. அப்படிக் குடிக்கவே முடியாது என்பவர்கள் ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

தினமும் இரவு படுப்பதற்கு முன் சாமந்திப்பூ டீயில் (கேமமைல் டீ) மலைத்தேன் சிறிது கலந்து குடிக்கலாம். பகல் நேரத்தில், பணியிடத்தில் இந்தப் பிரச்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்து வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறிது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோம்பும் துருவிய இஞ்சி சிறிதும் சேர்த்துக் கொதிக்க வைத்து பகல் வேளையில் இருமுறை குடிக்கலாம். இது அதிகபட்சமாக 50 முதல் 75 மில்லியைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்தும் உங்கள் பிரச்னை தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது.

The post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா appeared first on Dinakaran.

Tags : Professor of ,Muthiah ,Dinakaran ,
× RELATED கவுன்சலிங் ரூம்